பாடசாலைகளில் நடைமுறையிலுள்ள உடல் தண்டனையால், மாணவர்கள் நல்வழி மாறுவதற்கு பதிலாக, கல்வியை இடைநிறுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தண்டனைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்,
“தண்டனையால் மாணவர்கள் நேர்மையாக மாறுகிறார்கள் என்பதற்கும், கல்வியை பாதியில் விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. தண்டனை பெற்ற மாணவர்களை விட, கல்வியை விட்டு விலகியவர்களே அதிகம்,” என்று சுட்டிக்காட்டினார்.
எதிர்விளைவுகள் பெரிது உடல் தண்டனை காரணமாக மாணவர்களில்:
வன்முறை, திருட்டு போன்ற சமூக விரோத எண்ணங்கள், ஆக்ரோஷம், குழப்பம் மற்றும் தோல்வி மனநிலைகள் உருவாகி வருகின்றன என ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சூழ்நிலையில் ஆசிரியர்-மாணவர் உறவுகள் பாதிக்கப்படுவதுடன், மாணவர்கள் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், மாணவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம், சிறுவர் திருமணம், பணிக்கமர்த்தல்
துஷ்பிரயோகம், கடத்தல் போன்றவற்றை தடுக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கல்விக்கு நம்பிக்கையுடன் செல்லும் சூழ்நிலை தேவை“ தண்டனையை அஞ்சிக் கல்விக்குச் செல்வதைவிட, தன்னம்பிக்கை மற்றும் சுய ஒழுக்கத்துடன் கல்வியில் ஈடுபட வேண்டும் என்பதே அரசின் நோக்கம்,” என அமைச்சர் சவித்திரி போல்ராஜ் வலியுறுத்தினார்.
அத்துடன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் உரிய கொள்கைகள் மற்றும் சட்ட மாற்றங்கள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.








