ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் இறுதி நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் பின்னர் தனித்து அல்லது கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்திக்கு 105 ஆசனங்கள் கிடைக்கப்பெறும். என்றாலும், பொதுத் தேர்தலில் மக்கள் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதால் 120 இற்கும் அதிகமான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
113 என்ற பெரும்பான்மை கிடைக்காவிடின் தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் உதவியுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கான ரகசிய பேச்சுகளை தேசிய மக்கள் சக்தி நடத்தியுள்ளதுடன், அதற்காக சில கட்சிகளுடன் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற உள்ளது. ஜனாதிபதி முதல் நாடாளுமன்ற அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்க உள்ளதுடன், டிசம்பர் முதல் வாரத்தில் கணக்கு வாக்கு யோசனையை முன்வைக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
கணக்கு வாக்கு பணத்துக்குரிய தீர்மானம் தற்போது தயாரிக்கப்பட்டுவதுடன், முதல் அல்லது இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இதனை சமர்ப்பித்து அனுமதி பெறப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இந்த கணக்கு வாக்கு ஜனவரி பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான அரச வரவு – செலவினங்களை ஈடுசெய்வதற்கானது. பெப்ரவரி மாதம் இறுதியில் 2025ஆம் நிதியாண்டுக்காண வரவு – செலவுத் திட்டத்தை சமர்பிக்க உத்தேசித்துள்ள அரசாங்கம், மார்ச் பிற்பகுதிக்குள் அதனை நிறைவேற்றவும் ஆலோசித்துள்ளது.
2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கும், அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும், தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பை முன்மொழியவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.








