இலங்கை முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக களனி, நில்வல, மகாவலி ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாலும், யான், மல்வத்து, தெடியுரு, மஹா ஓயாக்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாலும் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக, மஹாவிலச்சிய, வெங்கலச்செட்டிக்குளம், நானாட்டான், முஸ்ஸாலை மற்றும் மடுவை அண்மித்த மல்வத்து ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் பதிவாகும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை, கவுடுல்ல, யான் மற்றும் பராக்கிரம நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவிக்கப்படும் நீரின் வீதம் இன்று அதிகரிக்க கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் நொச்சியாகம, ராஜாங்கனை, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ மாவட்டச் செயலகப் பிரிவுகளில் கலா ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதேசவாசிகள் மற்றும் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here