பொதுப்போக்குவரத்துக்கு இணைத்துக் கொள்ளப்படவேண்டிய சாரதிகளின் வயதெல்லை 60 வயதுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பரப்பப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்து தொடர்பில் அமுலான சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் மூலம் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற பாகங்களை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட நிவாரண காலத்தை 3 மாத காலத்திற்கு நீடிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையிலேயே தாங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்ததாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் மூலம் வாகனங்களில் உள்ள அலங்காரப்பொருட்களை அகற்றுவதனால் சாரதிகள் உட்பட அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் பெண்களுக்கான அழகு சாதனப்பொருட்களை இறக்குமதி செய்வதும் தடைசெய்வதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.








