விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே. இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபவர்கள் அல்ல. மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக நேற்று புதன்கிழமை (19/03/2025) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோறளைப்பற்று பிரதேச சபையில் 14 வட்டாரத்திலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை எனது தலைமையில் களமிறக்கியுள்ளேன். கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஒரு தேர்தல். இதில் வெற்றிபெறும் வேட்பாளர் 900 மீற்றருக்குள் இருக்கின்ற ஒரு வீதியை புனரமைக்க முடியும். குறிப்பாக பிரதேச சபை எல்லைக்குள் உள்ள அடிப்படை தேவைகளை செய்து முடிக்கமுடியும்.
அப்படிச் செய்வோம் இப்படிச் செய்வோம் என பிரசாரங்களை செய்வார்கள் இந்த காலங்களில். துரதிஷ்டவசமாக ஒட்டுக்குழுக்களாகவும், பயங்கரவாத குழுக்களாகவும் செயற்பட்டு பல கொலைகளை செய்த குழுக்கள் இந்த தேர்தல் காலத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர்.
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தொடர்பாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் உண்டு. இவர்கள் எல்லாம் மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இந்தமுறை போட்டியிடுகின்றனர்.
எனவே மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் இவர்கள் மக்களின் இருப்புக்களை சுரண்டி எத்தனையோ உயிர்கள் பறித்தவர்கள். கடந்த காலத்தில் புலிகள் இருந்த காலத்தில் பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகளில் இருந்து பிள்ளையான் கருணா பிரிந்த போதுதான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மாவட்டத்திலுள்ள அநேகமானவர்கள் பறிகொடுத்து உறவுகளாக, தாய் தந்தைகளாக, சகோதர்களாக இருக்கின்றோம். எனவே மக்கள் விழிப்போடு இந்த தேர்தலில் செயற்படவேண்டும் என்றார்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]







