வளிமண்டலவியல் திணைக்களம் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
நாளை (28) வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயங்குநிலை தென்மேற்குப் பருவமழை காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசந்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
மேலும், சிலாபம் முதல் காலி மற்றும் காங்கேசந்துறை முதல் திருகோணமலை வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் கடல் பயணங்களில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 முதல் 3 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் கரையை அண்டிய நிலப்பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கடலில் பயணிப்போர் மற்றும் மீனவர்கள், வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு கவனம் செலுத்தி தேவையற்ற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








