கனடாவில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிய தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி!
இந்திய வம்சாவளிய தொழிலதிபரும் Canam International நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு வெளியே மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் வீட்டின் வெளியே சிற்றூந்தில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, சாஹ்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். முதலுதவி அளித்தும் பலனின்றி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, மேலும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகிய சாஹ்சி, 1991 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்து தொழில்முனைவில் வெற்றியடைந்தார்.
இந்த கொலைச் சம்பவம் கனடாவில் இந்திய வம்சாவளிய சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]()