அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான மிக வலுவான புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், ஹெய்ட்டி மற்றும் ஜமைக்கா நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை பதிவான உயிரிழப்புகள் 26 ஆக உயர்ந்துள்ளன. இதில் 25 பேர் ஹெய்ட்டி நாட்டு குடியினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று (28) ஜமைக்காவை தாக்கியபோது, இந்த புயல் அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் பதிவுகளில் மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக இருந்தது.

ஜமைக்காவின் மேற்கு பகுதியில் மரம் விழுந்ததில் ஒரு குழந்தை பலியானது அங்குப் பதிவான ஒரே உயிரிழப்பாகும்.

பிரதமர் அண்ட்ரூ ஹோல்னெஸ், ஜமைக்காவை “பேரழிவு பகுதியாக” அறிவித்துள்ளார்.

புயலின் தாக்கத்தால் வீடுகள் சேதமடைந்தன, விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின, மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், சுமார் 2.8 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில், புயல் தற்போது கியூபாவை நோக்கி நகர்ந்து, அங்கு கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் தாக்கி வருகிறது.

கியூபாவில் 7,35,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்றும், மீட்புப் பணிகள் தொடர்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here