யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் சூதாட்ட நிலையம் அமைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வண.அதுரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(10) நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் தற்போது நான்கு சூதாட்ட நிலையங்கள் (கெசினோ) உள்ளன. அவற்றுடன் மேலதிகமாக நான்கு நிலையங்களை, அதுவும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் இடங்களிலேயே இவ்வாறான நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
அந்த முறைமை உலகில் எங்குமில்லை. கண்டியில் தலதாமாளிகையை வணங்கிவிட்டு, சூதாட முடியுமா என்றும் அவர் கேள்வியெழுப்பியதோடு சூதாட்ட நிலையங்களை அமைக்கப்போகும், இந்தியா, சீனா நபர்களின் பெயர்கள் என்ன? அவர்களின் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்றும் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இலங்கையர்கள் பங்குபற்ற முடியாத அளவுக்கு கெசினோவுக்கான சட்டங்களில் திருத்தங்கள் உள்ளன.
கெசினோவுக்குள் உள்நுழையும் போது, 200 அமெரிக்க டொலர்கள் கையிலிருக்க வேண்டும். அந்த கெசினோக்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே என்ற அடிப்படையில் கெசினோக்கள் ஆரம்பிக்கப்படும். தற்போது 10 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அனைவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.