சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி இராஜினாமா அவசியமான ஒன்றாக இருந்தாலும், முக்கியமான பதவிகளுக்கான பிரமுகர்களை தேர்ந்தெடுக்கும்போது அரசாங்கம் தீர்மானம் எடுப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தமான குறைபாட்டை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இந்த நிலைமையை சரி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சைக்கு மத்தியில் உரிய ஆவணங்களை சமர்பிக்க தவறிய சபாநாயகர் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் சுயமாக பதவி விலகுவது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவொன்றையிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது அந்த பதவியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி ராஜினாமா அவசியமான ஒன்றாக இருந்தாலும் முக்கியமான பதவிகளுக்கான பிரமுகர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அரசாங்கம் தீர்மானம் எடுப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தமான குறைபாட்டை பிரதிபலிக்கிறது. குறிப்பாக இந்த நிலைமையை சரிசெய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியை நான் பாராட்டுகின்றேன். சரியான மேற்பார்வையுடன் இந்தப் பிரச்சினையைத் தவிர்த்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.
மக்களின் நம்பிக்கையின் பலத்தில் அரசாங்கத்திற்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நம்பிக்கையைப் பாதுகாப்பது அவர்களின் கடமையாகும்.மக்களின் நம்பிக்கையைப் பேண வேண்டுமென்றால் பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த தீர்வினை வழங்குதல் அவசியம் என அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.








