மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய தீர்மானம் ஒன்றை இலங்கைக்கு எதிராக முன்வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இத்தகைய தீர்மானத்தை எதிர்கொள்வதாயின் அரசாங்கம் இன்றிலிருந்தே தொலைநோக்குடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தொலைநோக்குடன் அரசு செயற்பட தாமதித்தால் பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி பல வழிகளிலும் ஏற்பட கூடிய பேராபத்துக்களை தவிர்க்க முடியாது.
58 ஆவது மனித உரிமை பேரவை கூட்டத்தை சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, இலங்கை விடயத்தில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இரட்டை நிலைப்பாட்டில் இருந்து செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே இலங்கை மீதான ஜெனிவா அழுத்தங்கள் எதிர்வரும் காலங்களிலும் தொடரும். ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம் உட்பட நாட்டின் எதிர்க்கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
ஏனெனில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட உள்ளது. இதனை எதிர்கொள்ள அரசாங்கம் தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டையும் உக்ரைன் தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டையும் பின்பற்றுகிறது. சர்வதேச அரசியல் மாற்றமடைந்துள்ளது. உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தை அமெரிக்கா முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது என தெரிவித்தார்.








