இஸ்ரேல் – காஸாவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்தவகையில் ஆறு வாரகால முதல்கட்ட போர்நிறுத்தம் நாளை முடிவுக்கு வருகிறது.
அதைத் தொடா்ந்து, எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தல் மற்றும் காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய இரண்டாவது கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஹமாஸ் அமைப்பினர் தற்போது அறிவித்துள்ளனர்.
மேலும்,மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வது மட்டுமே ஒரே வழி.
அத்தோடு, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடர்ந்தால், பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிக பாதிப்பை அனுபவிக்க நேரிடும் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








