14 பேருக்கு ஒரு படை வீரர் என்ற அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பு அமையப்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இந்த படைவீரர்களில் நான்கில் மூன்று பகுதியினர் வடக்கு,கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
திறந்தவெளி சிறைச்சாலைக்குள் இன்றும் தமிழர்கள் வாழும் நிலையே இந்த நாட்டில் உள்ளதாக சிறிதரன் குறிப்பிட்டார்.
யுத்தம் இல்லாத நாட்டிற்கு ஏன் இவ்வளவு படையினர் எனவும் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பதற்கான நேர்த்தியான வேலைத்திட்டத்தை எந்த அரசாங்கமும் இதுவரை செய்யவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்தார்.







