கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் இலங்கை போக்குவரத்து சபையும் அறிவித்துள்ளன.

திடீர் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில், பரீட்சார்த்திகள் தங்களின் பரீட்சை நிலையங்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக வழங்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை நடைபெறும் நாட்களில் மாற்றுப் போக்குவரத்து வசதிகளைப் பெற முடியாத பரீட்சார்த்திகள் அருகிலுள்ள வலயக் கல்வி அலுவலகத்தை அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள அவசர தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே கோரிக்கை விடுத்துள்ளார்.

அவசர தொடர்பு எண்கள்:

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்: 117

இலங்கை பரீட்சைகள் திணைக்களம்: 1911

இத்தருணத்தில், பரீட்சார்த்திகள் சீரற்ற வானிலை தொடரும் இந்தக் காலப்பகுதியில் தங்கள் பரீட்சை நிலையங்களுக்கு முன்கூட்டியே வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here