உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கான தேவையான தலையீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு நீண்டகால திட்டமிடல் அவசியம் இருப்பதால், உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தை வாங்கி சேமிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் ரூ.1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தேசியப் பிரச்சினையாக மாற்ற முயற்சித்தாலும், அரசாங்கம் இதற்கான நியாயமான தீர்வை வழங்க தேவையான தலையீடுகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளித்த அமைச்சர், “எதிர்க்கட்சிகள் எந்த சித்தாந்தத்தையும் ஊக்குவிக்க முயன்றாலும், ஆகஸ்ட் மாதம் முதல் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், தயாசிறி ஜெயசேகர, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வாங்குவதற்கான சரியான அரசாங்கத் திட்டம் இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சபையில் சுட்டிக்காட்டினார்.







