உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைய உள்ளது.
ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் தாக்கல் முடிந்த பிறகு, நடைபயண பேரணிகள் அல்லது வாகனப் பேரணிகளை நடத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகப் பல அரசியல் கட்சிகள் நேற்று பல மாவட்டங்களுக்கு வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன.
அதன்படி, இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக கேகாலை, களுத்துறை, மாத்தளை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குத் தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தது.
அதேநேரம், கொழும்பு, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஐக்கிய மக்கள் சக்தி நேற்று மாவட்டத் தலைவர்களின் தலைமையில் தாக்கல் செய்தது.
இதேவேளை, வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் அதனை பரிசீலித்து அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க. தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பரிசீலனை நிறைவடைந்ததன் பின்னர் சுயேட்சை குழுக்களுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்.
சில மாவட்டங்களில் அதிகளவான சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமையினால் இந்த பணிகளில் சற்று தாமதம் ஏற்படலாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க. தெரிவித்துள்ளார்.







