ராஜபக்சக்களுடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) அவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தின் போது உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நிலக்கரி விநியோகஸ்தர்களுடன் நான் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை;எவ்வாறாயினும் இதுவரை காலமும் கொள்வனவு செய்யப்பட்ட தவறான முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
யோஷித்த ராஜபக்ஷவின் நண்பரின் நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டது. இந்த முறைகேடான கொள்முதலை மாற்றி அமைத்ததால் என் மீது போலியாக குற்றம் சாட்டுகிறார்கள்.
போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது.மொட்டு கட்சியினரின் யோசனைக்கேற்பவே பிரதான எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர். என் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்கலாம் அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுவேன்.
கடந்த காலங்களில் அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியவர்களே தற்போது எதிரணியில் உள்ளனர். ஊழலுக்கு எதிராக என்னை விமர்சிக்கும் தகுதி எதிர்கட்சியினருக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.







