அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 82 (அ) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று 03 மாதங்களுக்குள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது கல்வித் தகைமைகளைக் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என சில தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.
இவ்வாறு இயற்றப்படும் சட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் தமது சுயவிபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க கூடிய வகையிலான சரத்தும் உள்ளடக்கப்பட வேண்டும் என பெஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.






