13ம் திருத்த சட்டத்தை ஒழிக்கப் போகின்றோம் என்கின்ற ஜே.வி.பி இந்த நாட்டிலே புத்த மதத்திற்கு முன்னுரிமை இருப்பது போல  ஏனைய மதங்களுக்கும் கொடுத்து காட்டுங்கள் உங்களால் இயலும் என்றால் அதை முதலில் செய்யுங்கள் அதற்கு பிறகு இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்பதை கூறுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் ஜேவிபிக்கு சவால்விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிகரை வீதியிலுள்ள அவரது காரியாலத்தில் நேற்று திங்கட்கிழமை (2) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட 13ம் திருத்த சட்டத்தின் மூலமான மாகாணசபை முறைமையை முற்று முழுதாக நீக்கி மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்யும் திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதாகவும் இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கை மக்களின் விருப்பதற்கு மாறாக இந்தியாவினால் வலிந்து திணிக்கப்பட்ட ஒப்பந்தம் என ஜே.வி.பி ரில்வின் சில்லா ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்துள்ளார்.

உண்மையில் ரில்வின் சில்லா ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் 13ம் திருத்தசட்டம் அரசியல் அமைப்பிலே 1987 ம் ஆண்டு கொண்டு வரப்படும் போது 6 இல் 5 பெரும்பான்மையுடன் இருந்த ஜே.ஆர். ஜெயவர்தன அந்த திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தின் ஊடாக கொண்டுவந்திருந்தார். எனவே அப்படி இருக்கும் போது இலங்கை மக்களின் விருப்பதற்கு மாறாக கொண்டு வரப்பட்டது என்பது ஒரு ஒரு பொய்யானதும் போலித்தனமானதும்.

1978 புதிய அரசியல் அமைப்பு உருவாகி 22 திருத்தங்கள் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் 13 வது திருத்தச்சட்டம் மாத்திரமே முழுமையாக அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது. 1987 இல் இருந்து அதற்கு எதிராக போராடி வருகின்ற ஜேவிபி 2006 இல் தற்காலிகமாக இணைந்திருந்த வடகிழக்கை நீதிமன்றத்தை நாடி நிரந்தரமாக பிரித்தனர்.

கடந்த ஜனாதிபதி நாடாளுமன்ற தேர்தலின் போது வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு எதுவிதமான தீர்வு திட்டங்களையே கூறவில்லை ஜனாதிபதி அனுராவின் கருத்தையே அமைச்சர்களின் கருத்தையே விட அவர்களின் கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துதான் முதன்மையானது அதனடிப்படையில் அவரின் கருத்தை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

13 வது திருத்தசட்டம் தமிழர்களுக்கு தீர்வு இல்லை என கூறுபவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதிபடுத்திக் கொள்ளும் தமிழ் தேசிய கட்சிகள் கூட எங்களுடைய தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு என ஏற்றுக் கொள்ளவில்லை இது எங்களுடைய அரசியல் தீர்வுக்கு ஒரு முதல் புள்ளியாக கருத்திக்கொண்டிருந்தோம் எனவே  13 வது திருத்தசட்டம் தமிழர்களுக்கு தீர்வு இல்லை என கூறுபவர்கள் இதுவரை என்ன தீர்வு திட்டத்தை வைத்திருக்கின்றார்கள் என்றால் எதுவுமே இல்லை.

எங்குமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு என அவர்களால் கூறமுடியாமல் இருக்கின்றது இந்த நிலையில் நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் சமத்துவமாக வாழப் போகின்றோம் என சொல்லுபவர்கள் 13 திருத்த சட்டத்தை ஒழிக்கவேண்டும் அதற்கு எதிரானவர்கள் என்பவர்கள் தமிழ் மக்களின் புரையோடிப்போயுள்ள பிரச்சனைக்கு என்ன தீர்வு என முதலில் கூறவேண்டும்.

அதேநேரம் பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாமல் ஒழுப்போம் என்ற இவர்கள் தற்போது பயங்கரவாத தடைச் சட்டமூலம்  தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

எனவே அவர்களது உண்மையான முகம் எல்லோருக்கும் தெரியும் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றானவர்கள் என்பவர்கள் வடகிழக்கு சார்ந்த தமிழர்களுக்கே முஸ்லீம்களுக்கே அவர்களது அமைச்சுக்களில் இடம் கொடுக்கவில்லை  வடகிழக்கில் இருந்து எத்தனை முஸ்லீம்கள் தமிழர்கள் அவர்களது கட்சியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

7 தமிழர்கள் வடகிழக்கில் இந்த கட்சிக்கு தெரிவு செய்யப்பட்டடிருந்தனர். அவர்கள் வடகிழக்கை பூர்வீகமாக கொண்டவர்களில் இருவர் வடகிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள் அல்ல எனவே இனவாத ரீதியாக தமிழ் முஸ்லீம்களை இன்னும் பிரித்து புறக்கணிக்கின்றார்கள் என்பது வெளிப்படையாக நடைமுறையில் காட்டிக் கொண்டு பேச்சுக்களில் தமிழ் பேசும் மக்களை நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும் ஒன்றாக வழவேண்டும் என தெரிவித்துக் கொண்டு நான் சவால் விடுகின்றேன்.

தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் சமமாக சமத்துவமாக வாழுவோம் என்று கூறும் ஜே.வி.பி ஆகிய நீங்கள் இந்த நாட்டிலே புத்த மதத்திற்கு முன்னுரிமை இருப்பது போல  ஏனைய மதங்களுக்கும் கொடுத்து காட்டுங்கள் உங்களால் இயலும் என்றால் அதை முதலில் செய்யுங்கள் அதற்கு பிறகு இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்பதை கூறுங்கள் என சவால் விடுகின்றேன் என்றார்.

(மட்டக்களப்பு நிருபர்:- கனகராசா சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here