இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு பணிகள் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்தார்.
கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் உரையாற்றியபோது, மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் CEB நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டாலும், அவை அனைத்தும் 100 சதவீதம் திறைசேரிக்குச் சொந்தமானதாகவே இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
புதிய மறுசீரமைப்பின் கீழ் தொழில்புரிய விரும்பாத ஊழியர்கள் இழப்பீட்டுத் தொகையுடன் வெளியேறலாம்.
அவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5 மில்லியன் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சில தொழிற்சங்கங்கள் எழுப்பிய அச்சங்களைப் பற்றி விளக்கமளித்த அமைச்சர், சிலர் உண்மையை தவறாகப் புரிந்து கொண்டு தேவையற்ற தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறினார்.
மறுசீரமைப்பினால் எந்த ஊழியரும் வேலையை இழக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், வேலைப் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்படும் என உறுதி அளித்தார்.








