பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் மாத்திரமே வேதன அதிகரிப்பொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பாதீட்டு உரையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த வேதனமாக பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என முன்மொழியப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, அரசாங்கம் எந்த வகையில் இந்த வேதன விடயத்தில் தலையீடு செய்யும் என்பது குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை எனத் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபாவினை நாளாந்த வேதனமாக வழங்குவதற்கும் உற்பத்தி அடிப்படையிலான கொடுப்பனவுகளை வழங்கவும், பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் இணங்கியுள்ளது.
மேலும், வேதனத்தை அதிகரிப்பதாயின், உற்பத்தியிலும் , ஏற்றுமதியிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
உற்பத்தி அடிப்படையில் 1,700 ரூபாவுக்கு அதிகமாக நாளாந்த வேதனத்தை பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு தொடர்பான ,பாதீட்டு முன்மொழிவு தொடர்பான அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அவதானம் செலுத்தவுள்ளோம்.
எவ்வாறாயினும், உற்பத்தி அடிப்படையிலான வேதன அதிகரிப்பு என்ற விடயத்தை மையப்படுத்தியதாகவே பெரும்பாலும் அரசாங்கத்தின் நகர்வுகள் இருக்கும் என நம்புவதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.








