மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,890 குடும்பங்களைச் சேர்ந்த 37,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கல் முகாம்களில் 2,558 குடும்பங்களைச் சேர்ந்த 7,241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கிவருவதுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான படகு சேவை நடைபெற்றுவருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
இந்த சீரற்ற கால நிலை காரணமாக கடந்த 3 தினங்களாக பெய்துவந்த அடை மழையினால் மாவட்டதிலுள்ள குளங்களில் நீர் நிரம்பி வழிய தொடங்கியதையடுத்து அனைத்து குளங்களினதும் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் மற்றும் தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

இதனையடுத்து மட்டக்களப்பு நகரின் புளியந்தீவு பிரதேசத்தை சுற்றியுள்ள களப்பு பகுதியிலுள்ள வாவிக்கரை வீதிகள், பிரதான பேருந்து தரிப்பு நிலையம், மாநகர சபை கட்டிடம் அரசாங்க விடுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் இந்த வீதிகளூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மட்டக்களப்பில் திருகோணமலை ஏ15 பிரதான வீதி 3 ஆவது மைல் கல்லில் உள்ள வெள்ளக்குடி சந்தி அல்லது வைச்சந்தி என அழைக்கப்படும் சந்தியில் இருந்து ஊறணி சந்தி வரைக்குமான வீதி வெள்ள நீரில் மூழ்கியதையடுத்து அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே மட்டக்களப்பிற்கும் வவுணதீவுக்கும் இடையிலான வலையிறவு பாலத்தின் மேலால் வெள்ள நீரி பாய்ந்துவருவதால் அப்பிரதேசத்துகிடையிலானதும் மற்றும் புதூர், திமிலைதீவு, சேத்துக்குடா வீச்சுக் கல்முனை போன்ற பிரதேசங்களுக்கு இடையிலானதும் மண்டூர் வெள்ளாவெளிக்கும் இடையிலானதும் கிரானுக்கும் பலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கான படகு சேவை இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை தற்போது மழை குறைவடைந்துள்ளதுடன் பலத்த காற்று வீசுவதால் பல பாரிய மரங்கள் முறிந்து வீதிகளின் குறுக்கே வீழ்ந்துள்ளதை வெட்டி அகற்றும் பணிகளை மாநகர சபை தீயணைக்கும் படையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
இருந்த போதும் தற்போது வெலிகந்தை மன்னம்பிட்டி பகுதிகளில் ரயில் தண்டவாளத்தின் மேலால் வெள்ள நீர் எற்பட்டதையடுத்து மட்டக்களப்பிற்கான ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன் மாவட்டதில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெற்றுவருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பிரதேச செயலகம் மற்றும் இடர் அனர்த்த முகாமைத்துவம் இணைந்து சமைத்து உணவுகளையும் அவர்களின் நலன்புரிகளையும் மேற்கொண்டுவருகின்றது என தெரிவித்துள்ளார்.
- மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்







