நாட்டில் மருந்து பற்றாக்குறையும் விநியோக தாமதங்களும் இல்லாமல் மக்களுக்கு தொடர்ச்சியான மருந்து வழங்கல் உறுதி செய்ய, மருந்து கொள்முதல் மற்றும் விநியோக பொறிமுறைகளை சீரமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜனாதிபதி தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, மற்றும் சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள் இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது,
மருந்து கொள்முதல் மற்றும் விநியோகத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் செயல்முறை குறைகள், சில மருத்துவமனைகளில் ஏற்படும் மருந்து பற்றாக்குறை, மற்றும் இத்தகைய நிலைமைகள் மீண்டும் ஏற்படாதவாறு உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் என விவாதிக்கப்பட்டது.
ஜனாதிபதி, தொடர்ச்சியான மருந்து விநியோகத்துக்கு தேவையான நீண்டகால திட்டங்களை உடனடியாக தயாரிக்க வேண்டும் என்றும், மருத்துவமனைகளுக்கு தேவையான நிதி ஏற்கனவே திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.








