ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் அறிக்கையை இன்று வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த அறிக்கையினை கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று முற்பகல் 10 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸின் அறிக்கையை உதய கம்மன்பில கடந்த 21ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், தற்போதைய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான ஷானி அபேசேகர ஆகியோர் மீது அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இது அரசியல் அரங்கில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here