நாட்டில் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, விபத்துக்கள்  மற்றும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விபத்துக்களில் சிக்கும் பல வெளிநாட்டவர்களிடம் முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் இருப்பது விசாரணையில்  தெரிய வந்துள்ளது.

முறையான பயிற்சி இல்லாததே இந்த விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளது.

இலங்கையில் சட்டபூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கு வெளிநாட்டவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் குறைந்தபட்சம் இலங்கையில் செல்லுபடியாகும், இந்த நாட்டிற்கு செல்லுபடியாகும் சர்வதேச சாரதி  அனுமதிப் பத்திரம் அல்லது தங்கள் நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றை (மோட்டார் வாகன திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புச் சான்றிதழ்) வைத்திருக்க வேண்டும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச சாரதி அனுமதி பத்திரங்களில் முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதில்லை. அத்துடன்,  இலங்கையில் வெளிநாட்டு சாரதி அனுமதி பத்திரத்தை மாற்றும்போது, முச்சக்கர வண்டிகளுக்கான செல்லுபடியாகும் உரிமம் வழங்கப்படாது என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு பழைய உரிம முறையின் கீழ் A வகை அனுமதிப் பத்திரம் (கனரக வாகனங்களுக்கு) அல்லது E வகை அனுமதிப்பத்திரம் (முச்சக்கர வண்டிகளுக்கு) அல்லது புதிய முறையின் கீழ் B1 வகை அனுமதிப் பத்திரம் (மோட்டார் முச்சக்கர வண்டிகளுக்கு) வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய முறையின் கீழ் இரட்டை பயன்பாட்டு வாகனங்களுக்கு வழங்கப்படும் A வகை B சாரதி அனுமதி பத்திரம், முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கு செல்லுபடியாகாது. B1 வகை உரிமத்தைப் பெறுவதற்கு சாரதிகள் முச்சக்கர வண்டிகளுக்கு குறிப்பிட்ட சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான பரீட்சையில் சித்தி பெற வேண்டும்.

மேலும், C, C1, CE, D மற்றும் D1 வகை சாரதி அனுமதி பத்திரங்கள் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கு செல்லுபடியாகும்.

வாகனம் ஓட்டுவதற்கு பயிற்ச்சி பெற்றவர்கள் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான பரீட்சையில் சித்தி அடைந்து பயிற்சி அனுமதி பெற வேண்டும்.

இந்த விதிமுறைகள் இருந்தபோதிலும், சில உள்ளூர் நபர்கள் தேவையான சட்டப்பூர்வ உரிமங்கள் இல்லாமல் வெளிநாட்டினரை முச்சக்கர வண்டிகளை ஓட்ட அனுமதிப்பதன் மூலம் பணம் சம்பாதிப்பது ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு வெளிநாட்டினர் ஓட்டும் முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களை வரவழைத்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, அவர்கள் மீது நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ வழக்குகளைத் தாக்கல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாத ஒருவரை மோட்டார் வாகனத்தை செலுத்த அனுமதிப்பது மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 123(1) இன் கீழ் குற்றமாகும். இதற்கு 25,000 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here