உத்தேச வாகன இறக்குமதி செயல்முறையின் முதல் கட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத், முன்னாள் அரசாங்கம் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்தியிருந்த போதிலும், முறையான நடைமுறையின் கீழ் வாகன இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என நிதி அமைச்சும் மத்திய வங்கியும் நம்புவதாக தெரிவித்தார்.
முன்னைய ஒப்பந்தத்தின் பிரகாரம் வாகன இறக்குமதியை மூன்று கட்டங்களின் கீழ் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக தெரிவித்த அமைச்சர் ஹேரத், எதிர்காலத்தில் உத்தேச வாகன இறக்குமதி செயன்முறையின் கீழ் வாகன இறக்குமதிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.








