தென் கொரியாவின் கோசியோங் மாவட்டத்திலுள்ள மீன் பண்ணையொன்றில், 2 இலங்கையர்கள் உட்பட 3 தொழிலாளர்கள் நீர்த் தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 50 வயதுடைய ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 20, 30 வயதுடைய 2 இலங்கைத் தொழிலாளர்களே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த நீர்த் தொட்டி 4 மீற்றர் அகலமும் 2 மீற்றர் ஆழமும் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இச் சம்பவம் நடந்த சமயத்தில் அது நீரால் நிரம்பியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்பார்வையாளருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் உடலங்கள் மீட்கப்பட்டன.
இந்தநிலையில் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை விசாரணைகளை நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








