மன்னார், பூநகரியில் அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள காற்றாலை வேலைத்திட்டத்தை இரத்துச்செய்ய எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் ஒரு மணிநேரத்துக்கு ஒரு கிலோவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலை தொடர்பில் மறு பரிசீலனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு மணிநேரத்துக்கு ஒரு கிலோவோட் மின்சாரத்தை உள்ளூர் தேவைக்காக கொள்வனவு செய்வதெனில் அதானி நிறுவனத்தால் 8.26 சத டொலர் (US cents) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த கொள்வனவு தொகையை 06 சத டொலரை விட குறைந்த விலைக்கு நிர்ணயித்துக்கொள்வது தொடர்பில் அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த தொகையை 4.88 சத டொலர் வரை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதானி காற்றாலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கிலோவோட் மின் கொள்வனவுக்கு 8.26 சத டொலர் அதிகமென்றே அரசாங்கம் நம்புகிறது. அதற்கமைய, நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் 06 சத டொலருக்கும் குறைவாக கொள்வனவு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கே இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








