நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகம்கொடுக்க முடியுமான உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்பும் பொறுப்பு மக்களின் கைகளிலேயே இருக்கிறது.

அதனால் இந்தமுறை தேர்தலை நாட்டுக்கான முதலீடாக கருதி வாக்களிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராஹேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

மார்ச் 12 இயக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இம்முமுறை பாராளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்களை தெரிவு செய்துகொள்வதற்காக 48 அரசியல் கட்சிகளில் இருந்தும் 289 சுயேட்சை குழுக்களில் இருந்தும் 8ஆயிரத்து 888பேர் போட்டியிடுகின்றனர்.

அதனால் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துகொள்ளும்போது அவர்கள் பாராளுமன்றத்தின் பொறுப்புகளை நிறைவேற்ற பொருத்தமானவர்களா என அறிந்து தெரிவு செய்வதுதான் முக்கியமாகும்.

அதனால் எமது மார்ச் 12 இயக்கம் மக்களிடம் கேட்டுக்கொள்வது, உங்களது இந்தமுறை வாக்கை நாட்டின் முதலீடாக கருதி செயற்ட வேண்டும்.

எமது தேர்தல் வரலாறு பூராகவும் நாங்கள் எமது தனிப்பட்ட விடயங்களுக்காக, இலாபங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறோம்.

அதனால் அரசியல் கலாசார மாற்றம் ஒன்றுக்காக இந்தமுறை தேர்தலில் வாக்களிப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையை உலக நாடுகளில் உயர்ந்த இடத்துக்கு வைக்கும் பொறுப்பு இந்த நாட்டின் வாக்காளர்களுக்கு இருக்கிறது.

பாராளுமன்றத்தின் பிரதான விடயங்களை அடிப்படையாகக்கொண்டு மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதாவது பாராளுமன்றத்தில் இடம்பெறும் சட்டம் இயற்றும் நடவடிக்கை, அரச நிதி முகாமைத்துவம் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகிய மூன்று பிரதான விடயங்களாகும்.

இந்த விடயங்களை மேற்கொள்ள முடியுமான, அதற்கான ஆற்றல் உள்ளவர்களை தெரிவு செய்துகொள்ள இந்த தேர்தலில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது.

இதுவரை காலமும் இந்த பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமானவர்களை சரியான முறையில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்புவதற்கு எங்களுக்கு முடியாமல் போனதாலே நாடு அராஜக நிலைக்கு செல்ல காரணமாகும்.

அடுத்த விடயம்தான் தெரிவு செய்து அனுப்பும் உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமான அறிவு மாத்திரம் இருந்து போதாது. அதற்கான குணாதிசயங்களும் இருக்க வேண்டும்.

குறிப்பாக மக்களின் தேவைகள் தொடர்பில் உணர்வுள்ளவர்கள், நியாயமான முறையில் சம்பாதிப்பவர்கள். இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டு இ்ல்லாதவர்கள், இன,மத கலாசார அடையாளங்களை மதிப்பவர்கள், வினைத்ரமையுடன் செயற்படக்கூடியவர்கள் போன்ற குணாதிசியங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் பிரதான பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமானவர்களை மக்கள் தெரிவு செய்து அனுப்பினால் எமது நாட்டை உலகில் உயர்ந்த இடத்தில் வைக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் கடந்த காலங்களைப்போன்று எமது தனிப்பட்ட நன்மைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பினால் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு வீழ்ச்சியடையும்.

அதனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்கள் தங்களின் பொறுப்பை சரியானமுறையில் இந்த தேர்தலில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here