போலி நாணயத்தாள்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நேற்று (25) வெவ்வேறு பொலிஸ் நடவடிக்கைகளில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு விசாரணை நடவடிக்கையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட
முதல் சோதனை நடவடிக்கையில், மௌன்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் ரத்மலானை மற்றும் இம்புல்கொட பகுதிகளில் விசாரணைகளை நடத்தினர்.
இதன்போது, ஆறு சந்தேக நபர்கள், 91 கிராம் மற்றும் 200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடனும், இரண்டு 5,000 போலி நாணயத்தாள்கள் மற்றும் 21, 2 000 போலி நாணயத்தாள்களுடனும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள், 25, 29, 30, 32, 35 மற்றும் 52 வயதுடைய இம்புல்கொட, தெஹிபிட்டிய, பெலந்த மற்றும் ரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக மௌன்ட் லவினியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதே இரவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையில், கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிவலை பகுதியில் 56 வயதுடைய ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரிடமிருந்து ஐந்து 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும், 38, 2,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டன. அவர் வெள்ளவத்தையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.








