மஹியங்கனை 50ஆம் கட்டை உக்வகாவ பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1050 கஞ்சா செடிகளும் ஒரு கிலோ 500 கிராம் காய்ந்த கஞ்சாவுடனும் ஒருவர் நேற்று சனிக்கிழமை (26.10.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பணம் கொடுத்து கஞ்சா கொள்வனவு செய்வதற்காக மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் இந்த சந்தேக நபரிடம் 10 கிராம் காய்ந்த கஞ்சாவை கொள்வனவு செய்துள்ளனர்.

பின்னர், சந்தேக நபரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

உக்வகாவ, குடாஓய, வெலென் பெல, மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேக நபரின் சேனையில் மானா செடிகளுடன் சுமார் 5 அடி உயரமான கஞ்சா செடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல, பதுளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர், சந்தேக நபரை இன்று ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) மஹியங்கனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here