தேசிய கல்வியியல் கல்லூரி முறைமையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தற்கொலை விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துவதற்கு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் கல்வியியல் கல்லூரியின் முதல்வரிடமிருந்து விரிவான அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் மாணவியின் தற்கொலை தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரி முறைமையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








