வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் சுமார் 50 CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியும், அவரை தப்பிச் செல்லச் செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், தாக்குதலுக்கு பின் வழியிலேயே பிரிந்து இரு தனித்தனியான மோட்டார் சைக்கிள்களில் பயணித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, கடந்த 22ஆம் திகதி காலை தனது அலுவலக அறைக்குள் இனந்தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டு வரும் ஆரம்ப விசாரணைகளில், துப்பாக்கிதாரிகள் தாக்குதலுக்குப் பின் மாத்தறை நோக்கிச் சென்றிருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும், விசாரணை முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடும் கூட்டம் ஒன்று, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் Zoom தொழில்நுட்பம் வழியாக இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், தங்காலை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமாரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடிக் கண்காணிப்பில், தற்போது நான்கு தனித்தனி பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்ட நாளில், ‘மிதிகம ருவன்’ என அறியப்படும் கைதி ஒருவர், நீதிமன்ற நடவடிக்கைக்காக சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டிருந்தார் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொலிஸ் தகவலின்படி, குறித்த ‘மிதிகம ருவன்’, தனது மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை மறைக்க தலைவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அண்மையில், ‘மிதிகம ருவனுக்கு’ சொந்தமான நான்கு துப்பாக்கிகளை வெலிகம பிரதேசத்தில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடிக்க உதவியதும், கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகரவே என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலால் ‘மிதிகம ருவன்’ கடும் அதிருப்தியடைந்ததாகவும், அதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தக் கொலை வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







