11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய பிரதான குற்றவாளி விரைவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
“விடுதலைப் புலிகள் காலத்தில் மீட்கப்பட்ட தங்க நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முயன்றபோதும் அடையாளம் காண முடியாத நிலை தொடர்கிறது. எனவே, அவை பணமாக மாற்றப்பட்டு வடக்கு மாகாண அபிவிருத்திக்காக பயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.
மேலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பிலும் முறையான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உண்மையை மறைக்கும் நோக்குடன் எந்த ஆணைக்குழுவும் அமைக்கப்படவில்லை; உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.
இராணுவத்தினர் குற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது, இராணுவத்தை இலக்காகக் கொண்ட வேட்டையாடல் அல்ல. சட்டம் சரியாக செயற்படுத்தப்படும்போது ‘இராணுவ பழிவாங்கல்’ என கோசமிட வேண்டாம்.
கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இருந்து தமிழ் இளைஞர்கள் 11 பேர் காணாமலாக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவும் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குற்றவாளி மிகவும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்” என ஜனாதிபதி கூறினார்.








