கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல பயன்படுத்தியதாகக் கூறப்படும் படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் மறைக்கப்பட்டிருந்த அந்தப் படகு இன்று (24) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணைகளில், குறித்த படகு ஏ. ஆனந்தன் என்ற நபருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது. மேலும், அது 400 குதிரைத்திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த படகாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஆனந்தனை, கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணைகள், கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணையின் பின்னரே அராலித்துறையில் மறைக்கப்பட்டிருந்த படகு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







