யாழ்.தென்மராட்சி வரணி, நாவற்காடு கிழக்கு வெளி வயல் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்பதால் நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடையும் அபாயத்தில் இருப்பதாகவும் தொண்டைமனாறு தடுப்பணையின் வான் கதவுகளை திறந்து விடுமாறு கோரி அப்பகுதி விவசாயிகள் கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இது பல ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருந்தன.

இதையடுத்து அன்றையதினமே அப்பகுதிக்கு விரைந்த நீர்ப்பாசனத் திணைக்கள உயர் அதிகாரிகள், மற்றும் தென்மராட்சி பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வயல் பகுதியினை பார்வையிட்டதுடன் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் தொண்டைமனாறு தடுப்பணையின் வான் கதவுகள் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் திறந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை விவசாயிகளை அழைத்துச் சென்று வெள்ள நீர் வடிந்தோடமைக்கான காரணங்களைக் கூறி யாக்கரு வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பாலத்தால் வெள்ள நீர் குறைவாக வடிந்தோடுகின்றது என்பதையும், கப்பூது பகுதிக்கும் மண்டான் பகுதிக்கும் இடையில் புதிதாக அமைக்கப்பட்ட வீதியில் சரியான முறையில் பாலம் அமைக்கப்படாமையினால் வெள்ள நீர் வடிந்தோடுவதில் தடங்கல் ஏற்பட்டிருப்பதையும் காண்பித்து தெளிவுபடுத்தியிருந்தனர்.

இந்த விடயங்களை அறிந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் விவசாயிகளை அழைத்து யாழில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பிரச்சினை தொடர்பாகக் கேட்டறிந்து கலந்துரையாடியதுடன் வயல் வெளியில் வெள்ள நீர் தேங்காது வடிந்தோடும் வகையில் தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுயளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் விவசாயிகள் தொண்டைமனாறு தடுப்பணைப் பகுதிக்கு விரைந்து நீர் பாய்வது தொடர்பில் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து அமைச்சர் வயல் வெளியை பார்வையிடுவதற்காக வரணிப் பிரதேசத்திற்கு வருகை தந்து வெள்ள நீர் தேங்கி நிற்பதை பார்வையிட்டதுடன் இந்த வருடத்துடன் தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்திருந்ததுடன் விவாசாயிகளுடன் கலந்துரையாடினார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here