நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர், “மஹரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் கூறுகையில், குறித்த பெண் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் வாடிக்கையாளர்களுடன் ஈஸி கேஷ் வழியாக பண பரிமாற்றம் செய்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் கடந்த 6 ஆம் திகதி நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூ.141,000 பணத் தொகையும் 32 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பெண்ணை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








