இராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் ரோந்துப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் கண்ணாடி இழை படகில் இருந்த மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்தில் உள்ள கடலோர காவற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், நெடுங்குளத்தைச் சேர்ந்த ஆர்.நிரோஷன் (34), யாழ்ப்பாணம் உடுத்துறை, தாளையடியைச் சேர்ந்த டி.பால ரமேஷ் (37) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பி.புலைகுமார் (44) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் கூட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.








