கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருள் கடத்த முயன்ற 21 வயது கனேடிய பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்றும், அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் பயணப் பைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அதில் 18.253 கிலோகிராம் ஹாஷிஷ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இந்த ஹாஷிஷ் ஆறு பெரிய பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட 72 சிறிய பொட்டலங்களாக இருந்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.








