முட்டையின் விலை குறைவடைந்துள்ள நிலையில், அதன் பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு வெதுப்பக உற்பத்தியாளர்களிடம் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன எமது செய்திச் சேவைக்கு கருத்துரைக்கும் போதே இந்த கோரிக்கையினை விடுத்தார்.
சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில், அதன் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம், அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உட்பட உணவக உரிமையாளர்களிடம் நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்றைய தினம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையிலேயே,. முட்டையின் விலை தற்போது 30 ரூபாவிற்கு குறைவடைந்துள்ளதுடன் வெதுப்பக உற்பத்திகளை பொறுத்தவரையில் முட்டை பாரியளவு செல்வாக்குச் செலுத்துகிறது.
முட்டை விலை குறைவடைந்துள்ள போதிலும், உற்பத்திகளில் குறிப்பிடத்தக்க விலைக் குறைப்பை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடு வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்திடம் இல்லை.
எனினும், மனிதாபிமான ரீதியில் சிந்தித்து, முட்டை சேர்க்கப்படும் உணவுகளின் விலைகளை குறைத்து அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு வெதுப்பக பொருள் உற்பத்தியாளர்களிடம் கோருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.







