இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்துக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது பழைய நிலைக்குத் திரும்புவதற்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா அணி தோல்வியடைந்த நிலையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த தோல்வி குறித்து கருத்துரைத்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர், வீரர்களுக்குச் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அர்ப்பணிப்பு காணப்படுமாயின் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அவரின் கருத்துக்கு நிகரான கருத்தை வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, வீரர்களின் அனுபவத்துடன் உடற் தகுதியும் மிகவும் முக்கியமானதெனக் கூறியுள்ளார்.








