தெற்கில் செயல்படும் சில அரசியல்வாதிகள், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொதுமக்களிடமிருந்தும் புலனாய்வு பிரிவுகளிடமிருந்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கடந்த அரசியல் சூழல் காரணமாக இந்தவகையான குற்றச்செயல்கள் பெருகியதாகவும், தற்போதைய அரசு அதை முற்றும் ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பாக அரசியல் தொடர்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தகவல்களை வழங்கத் தொடங்கியுள்ளனர். நாங்கள் இந்த தகவல்களை தெளிவாக விசாரிக்கிறோம். இன்று மாத்திரம் மூன்று பெரிய போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் நடைபெற்றுள்ளன,” என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் , தகவல் வழங்கும் பொதுமக்களின் தனிநபர் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்றும், சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இருந்தால், அதனை தெளிவாக பொலிஸாரிடம் வழங்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறிப்பிட்டார்.








