2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் அண்மைக்காலமாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கை எனது கைக்கு வந்தது, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் இணைக்க நான் தயக்கம் காட்டியதால் அந்த அறிக்கையை நான் பகிரங்கப்படுத்தவில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆயர்கள் பேரவையின் பதிலைப் பெற்று, ஈஸ்டர் தாக்குதல்களின் போது புலனாய்வுப் பிரிவின் வீழ்ச்சி குறித்து ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதே தமது நோக்கமாகும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

“தேசிய புலனாய்வு சேவையின் சரிவு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்து அதன் அறிக்கையை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய மூவரடங்கிய குழுவிற்கு சமர்ப்பித்து புலனாய்வு அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்க முன்மொழிய உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கர்தினால் தம்மைப் பற்றி வெளியிட்ட அனைத்துக் கருத்துக்களும் அடிப்படையற்றவை எனவும், ஈஸ்டர் அறிக்கைகள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆயர்கள் மாநாட்டில் வெளியிட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அவரது பதவிக்காலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here