அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் நடைபெற்ற ஐ.சி.சி வருடாந்த பொதுக் கூட்டத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தவும், நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த வழிகாட்டல்களை பின்பற்றுவதில் சபை தோல்வியடைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே இந்நடவடிக்கையின் முக்கிய காரணம் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இருப்பினும் அடுத்த ஆண்டு(2026) பெப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் 2028 இல் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க தேசிய அணி பங்கேற்பதில் சிக்கல் இருக்காது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.








