திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான பிரச்சினையை இனவாத திசை நோக்கி தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (17) கருத்து வெளியிட்ட அவர்,
அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“திருகோணமலையில் விகாரை தொடர்பான பிரச்சினை உருவாகியுள்ளது.
புத்தர் சிலை பாதுகாப்புக்காகவே ஞாயிறு இரவு அகற்றப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தாலும், பொலிஸாரின் தாக்குதலில் இரண்டு பிக்குகள் காயமடைந்துள்ளனர் என்பது வருந்தத்தக்கது.
இந்த விகாரை 1952 இல் நிறுவப்பட்டதுடன், 2004ஆம் ஆண்டு புனித தலமாக அறிவிக்கப்பட்டது.
மேலும், கிழக்கு மாகாணத்தில் பழமையான அறநெறி பாடசாலை இங்கு அமைந்துள்ளது.
இந்நிலையமைப்பில், “இதை இனவாத விவகாரமாக மாற்ற அனுமதிக்கக்கூடாது. அரசு தலையிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு வழங்க வேண்டும்” என்று நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.








